''அமெரிக்க முகத்தில் ஈரான் அறைந்தது'' மீண்டும் தோன்றிய காமெனி பரபரப்பு தகவல்


தலைமறைவாகியிருந்த ஈரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த 2 வாரங்களாக உக்கிரமான போர் நடைபெற்று வந்தது. இரு தரப்பும் ஏவுகணைகள் மூலம் மாறிமாறி தாக்குதல் நடத்திக்கொண்டன.

இதில் பொது மக்கள் உட்பட ஈரானின் ராணுவ உயர் தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டிருந்தனர்.
ஜூன் 24 முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில் மத்திய கிழக்கு சற்றே அமைதியாகக் காணப்படுகிறது.

இதற்கிடையே, ஈரானின் அதிஉயர் தலைவர் காமெனி எங்கே இருக்கிறார் என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார்.

ஈரானின் எந்த ஒரு முக்கியமான முடிவாக இருந்தாலும், அதன் இறுதி முடிவை எடுக்கும் கமேனி கடந்த ஒரு வாரமாக பொது வெளியில் தோன்றவில்லை.

 அவர் பெயரில் ஓரிரு அறிக்கைகள் மாத்திரம் வெளியாகின. குறிப்பாக, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக கமெனி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.

அதோடு, ஈரான் அரசில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்களையும் அமைச்சர்களையும் கூட அவர் சந்திக்கவில்லை எனக் கூறப்பட்டது.

இத்தகைய சூழலில், காமெனியின் நிலை என்ன என ஈரான் செய்தித்தாள்களும் கேள்வி எழுப்பியிருந்தன.
அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்பது பொதுமக்களையும் பதற்றப்படுத்தியது.

இந்நிலையில்தான் ஈரானின் வெற்றியை அறிவிக்க ஈரானின் தொலைக்காட்சியில் மீண்டும் தோன்றியுள்ளார்.

 தொலைக்காட்சியில் பார்க்கும்போது சோர்வாக இருந்த காமெனி, தனது நாடு அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாகத் தெரிவித்தார்.


மேலும், அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களின் தாக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகைப்படுத்திக் காட்டுகிறார் எனக் குற்றம்சாட்டினார். “சியோனிச ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அமெரிக்கா உணர்ந்ததால்தான் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.


“அவர்கள் எங்கள் அணுசக்தி நிலையங்களைத் தாக்கினர், இது நிச்சயமாக சர்வதேச நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குத் தொடர தகுதியானது, ஆனால், அவர்கள் குறிப்பிடத்தக்க எதையும் செய்துவிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் சரணடைதல் தொடர்பாகப் பேசிய கமெனி, ஈரான் ஒருபோதும் சரணடையாது எனவும், மீண்டும் அமெரிக்கா ஈரானைத் தாக்க முடிவு செய்தால் அதற்கு கடுமையான விளைவை சந்திக்க வேண்டிவரும் என்றும் எச்சரித்திருக்கிறார்.